Posts filed under ‘கட்டுரைகள்’
29.12.08 கட்டுரை:அப்பாக்களுக்கு தெரிஞ்சது கொஞ்சம் தான்!
குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் அப்பாக்களுக்கு இனி கவலையில்லை. உங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு உடனுக்குடன் நீங்கள் பதில் சொல்வதற்காகவே புத்தகம் ஒன்று வந்துள்ளது.
வீட்டில் இருக்கும் போது குழந்தைகள் நம்மிடம் வந்து அப்பா, உன்னுடைய தலையில் எத்தனை முடி உள்ளது என்றோ, எதற்கு நமக்கு புருவங்கள் தேவை என்றோ, வானம் ஏன் நீலநிறமாக இருக்கின்றது என்பது போன்றோ கேள்விகளைக் கேட்கும் போது எவ்வளவு படித்த அப்பாக்களும் சற்று தடுமாறித்தான் போகின்றனர்.
இப்படித்தான் லண்டனைச் சேர்ந்த வென்டெல் ஜெமிசென்னுடைய இளைய மகன் கேட்ட வினாக்களுக்கு விடை சொல்லத் தெரியாமல் நம்ம ஊர் அப்பாக்களைப் போல முழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனைக்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்பதில் வென்டெல் ஜெமிசென் களம் இறங்கினார்.
அதன் விளைவுதான் அப்பாக்களுக்குத் தெரிஞ்சது கொஞ்சம் – என்ற புத்தகம். இதற்காக அவர் உயிரினங்கள் தோற்றம், மருத்துவம், பழங்கால வரலாறு தொடங்கி வானிலைத் தொடர்பான அடிப்படையான கேள்விகளுக்குத் சம்மந்தப்பட்ட துறை வல்லுநர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று அதனை ஒர் புத்தகமாக தொகுத்துள்ளார்.
பொதுவாக குழந்தைகள் கேட்கும் இரண்டு கேள்விகளான எனது தலையில் எத்தனை முடி உள்ளது என்பதும், வானம் ஏன் நீலநிறமாக உள்ளது என்பதும் தான். குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தலையில் ஒரு லட்சம் முடிகள் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேநேரத்தில் சிவப்பு நிற தலைக்கொண்டவர்கள் தலையில் உள்ள முடி சற்று கனமாக இருப்பதால் எண்ணிக்கைக் சற்று குறைவாக இருக்கும் என்றும் அதில் கூறியுள்ளனர்.
வளிமண்டலத்தில் உள்ள காற்றின் மூலக்கூறுகள் தான் வானம் நீலமாக தோன்றக் காரணமாகும். அதிக அதிர்வெண் கொண்ட அலைகள் காற்று மூலக்கூறுகள் வழியாக பயணிக்கின்றன. குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகள் காற்று மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகின்றன. எனவே எப்போதெல்லாம் காற்று மூலக்கூறுகளை நீல நிற குறு அலைவரிசைகள் தொடுகின்றனவோ அப்போதெல்லாம் அவை வான்வெளி முழுவதும் சிதறடிக்கப்படுகின்றன. எனவே தான் வானம் எப்போதும் நீலநிறமாக காணப்படுகிறது.
குளிக்கும் போது நம்முடைய உள்ளங்கை, பாதம் ஆகிய பகுதிகளில் ஏன் ஒருவிதமான சுருக்கம் ஏற்படுகிறது என்பது மற்றொரு கேள்வி, குளிக்கும் போது நம் உடலில் உள்ள மேல்தோல், தோலினுள் நீர் உட்புகாமல் இருப்பதற்காக எண்ணெய் போன்ற வழவழப்பான செபும் என்ற திரவத்தை உமிழ்கிறது. இது சிறிது நேரம் வரையிலும் தோலில் நீர் உட்புகாதவாறு பார்த்துக் கொள்கிறது. நீண்டநேரம் தண்ணீரில் இருக்கும் நிலையில் செபும் கரைந்து நீர் தோலுக்குள் உட்புகத் தொடங்குகிறது. இதனால் வெளிப்புறத்தோல் விரிவடையத் தொடங்கும். அப்போது அதன் கீழ் பகுதியில் உள்ள திசுக்கள், மேற்புறத் தோலின் விரிவுக்கு தகுந்தவாறு சுருங்குவதால் அவ்வாறு ஏற்படுகிறது.
வாகனங்களை நிறுத்த ஏன் சிவப்பு நிற விளக்குகளை பயன்படுத்துகின்றார்கள் என்று கேட்டால் இனி தாராளமாக நீங்கள் இவ்வாறு பதில் சொல்லலாம், 19 –நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்காட்டிஸ் பொறியியல் வல்லுநர் ராபர்ட் ஸ்டிவன்சன் அப்போது கலங்கரை விளக்கம் அமைக்க வெண்மை நிறத்துக்கு பதிலாக வேறு ஒருநிறத்தை தேர்வு செய்வதில் ஈடுபட்டிருந்தார்.
அந்த காலத்தில் சிவப்பு நிறக் கண்ணாடிகள் தான் இருந்துள்ளது. மேலும் எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தாலும் சிவப்பு நிறத்தைக் காணமுடியும் என்று கூறியுள்ளனர். அதிலிருந்து கடல் போக்குவரத்தில் சிக்னலாக பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிறம், தொடர்ந்து இரயில்கள், சாலைப் போக்குவரத்தில் வாகனங்களை நிறுத்தவும் பயன்படத் தொடங்கியது.
நமக்கு ஏன் புருவங்கள் உள்ளன என்பது தான் அடுத்த கேள்வி. இதற்கு, சமூகமாக வாழும் மனிதன், மற்றொரு மனிதனின் உணர்வுகளை அவனுடைய முகத்தின் மூலம் எளிதில் தெரிந்து கொள்கிறான். முகவெளிப்பாடுகளை ஒருங்கிணைக்கும் முக்கியமான பணியைத் தான் புருவங்கள் மேற்கொள்கின்றன என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற, குழந்தைகள் நம்மிடம் கேட்கும் ஏராளமான, நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் ஆயிரமாயிரம் விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கான விடைகளைத் தொகுத்து வந்துள்ள புத்தகம் தான் அப்பாக்களுக்கு தெரிஞ்சது கொஞ்சம். கேள்வி கேட்கும் குழந்தைகளைத் திட்டாமல், பதில் சொல்லத் தயாராவதே அப்பாக்களின் புத்திசாலித்தனமாகும் என்கிறார் அந்த புத்தகத்தின் ஆசிரியரான வென்டெல் ஜெமிசென்.
24.12.08 கட்டுரை:குழந்தைகளுக்கு வாசித்தலில் ஏற்படும் பிரச்சனைகள்!
டிஸ்லெக்சியா என்ற வாசித்தலில் ஏற்படும் தடுமாற்றம், கண்களால் பெறப்படும் எழுத்து வடிவங்களை அர்த்தமுள்ள மொழியாக மாற்றமுடியாத மூளையின் திறன் இன்மையாகும். இது குழந்தைகளுக்கு கற்றலின் போது ஏற்படும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையாகும்.
இந்தியாவில் பள்ளியில் படிக்கும் சில குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை இருந்து வருகிறது. குறிப்பாக சிறப்பு கல்வி சேவைகளை பெறும் பெரும்பாலான குழந்தைகளுக்கு வாசிப்பதில் தடுமாற்றம் இருக்கிறது.
ஒரு சாதாரண புத்தியுள்ள மற்றும் பார்வை நன்றாக உள்ள பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட இந்த வாசிப்பு பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால் இதுபோன்ற பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேச்சில் எந்த ஒரு குறையும் இருக்காது. ஆனால் பேசுவதை புரிந்து கொள்வதிலும் எழுத்து மொழியை அறிவதிலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதற்கு பல் துறை புலனுணர்வு கல்வித் திட்டப் பயிற்சி முறை என்ற சிகிச்சை பலன் அளித்து வருகிறது. பெற்றோர்களின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பும் இதுபோன்ற குறையை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குழந்தைகளிடம் ஏற்படும் அறிகுறிகள் :
பள்ளிக்கு குழந்தைகள் செல்ல துவங்கும் முன் இந்த குறையை தெரிந்து கொள்வது அரிது. ஆனால் சில முந்தைய அறிகுறிகள் டிஸ்லெக்சியா இருப்பதை அறிவுறுத்தலாம். அதாவது உங்கள் குழந்தைகள் கேள்விகளுக்கு தாமதமாக பதில் அளிக்கலாம், புதிய வார்த்தைகளை பேசுவதில் தடுமாற்றம் ஆகியவை இருந்தால் டிஸ்லெக்சியா ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
குழந்தைகள் பள்ளிக்கு செல்ல துவங்கிய சில நாட்களில் உங்களுக்கு குழந்தைகளிடத்தில் வாசிப்புப் பிரச்சனை இருப்பது தெரியவரும்.
அச்சில் உள்ள எழுத்துகளை என்னவென்று கூறுவதில் சிரமம்.உங்கள் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப பேச்சுத் திறன் இல்லாமல் அதனை விட குறைந்த நிலையில் உள்ள பேச்சுத் திறன் ஆகியவை டிஸ்லெக்சியா இருப்பதை அறிவுறுத்தலாம். இக்குழந்தைகளுக்கு பொதுவாக தாங்கள் கேட்பதை அர்த்தமுள்ள ஒரு வாக்கியமாக உணர்ந்து பதில் கூறுவதில் சிரமம் ஏற்படும். வேகமாக நாம் பேசினால் அதனை புரிந்து கொள்வதில் திணறல் ஏற்படும். பல்வேறு விஷயங்களை ஒரே சமயத்தில் கூறினால் ஞாபகம் வைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படலாம்.
ஆங்கில எழுத்துகளை வைத்து கூறவேண்டுமென்றால் b மற்றும் d எழுத்துகளை மாற்றி மாற்றி பிரயோக்கலாம். அதேபோல் ஒரே எழுத்துகள் கொண்ட இரு வேறு வார்த்தைகளை மாறி மாறி பயன்படுத்துவதும் டிஸ்லெக்சியா குழந்தைகளின் பொதுவான அறிகுறிகள். உதாரணமாக saw மற்றும் was ஆகிய வார்த்தைகளில் குழப்பம் நிலவும்.
டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் :
* வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக படிக்க துவங்குவார்கள்.
* வார்த்தைகளிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிய தவறுவார்கள்.
* ஒவ்வொரு வார்த்தைக்கும் இருக்கும் இடைவெளியை அறியத் தவறுவார்கள்.
* தெரியாத வார்த்தையை உச்சரிக்க திணறுவார்கள்.
இதற்கான காரணங்கள் :
அறி திறனுக்கும் அதனை செயல்படுத்துவதற்கும் இடையே இடைவெளியை உருவாக்குவதுதான் கற்றலில் ஏற்படும் பிரச்சனையாக நாம் கருதுகிறோம். டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகள் சராசரி மாணவ மாணவியாகவோ அல்லது சராசரிக்கும் மேற்பட்ட மாணவ மாணவியராகவோ இருக்கலாம். ஆனால் வாசிப்புத் திறன் அவர்களிடம் எதிர்பார்ப்பதை விட குறைவாகவே காணப்படும். கற்றலின் பிற பிரச்சனைகள் என்னவெனில் கவனம் பிறழ்வது, எழுத்துப் போட்டித் திறன்களில் சரியாக செயல்பட முடியாதது, மேலும் கணக்கு பாடத்தில் திறமையின்றி இருத்தல் ஆகியவையாகும்.
மூளையிலுள்ள மொழி அறிதிறன் பகுதியில் ஏற்படும் சில மாற்றங்களால் டிஸ்லெக்சியா ஏற்படுவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு பரம்பரை வியாதியாகவும் உள்ளது. நோய்க்கணிப்பு :
டிஸ்லெக்சியா இருப்பதை அறிய ஒரே ஒரு பரிசோதனை முறை எதுவுமில்லை. உங்கள் மருத்துவர் குழந்தைகளின் புலன் உணர்வு திறன், அறி திறன், கல்வி மற்றும் மனோவியல் காரணிகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொள்வார். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி விதம், மருத்துவ வரலாறு, உங்கள் குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் கேட்டறியலாம்.
கீழ் வரும் பரிசோதனைகளையும் செய்யுமாறு கூறலாம் :
பார்வை, கேட்கும் திறன் மற்றும் நரம்பியல் பரிசோதனைகள் : ஏனெனில் உடலின் பல்வேறு பகுதியில் உள்ள பிரச்சனையால் டிஸ்லெக்சியா ஏற்பட்டுள்ளதை அறிய இந்த பரிசோதனை அவசியம்.
மனோவியல் மதிப்பீடு : சமூக, குடும்பப் பிரச்சனைகள், கவலை, பயம், மன அழுத்தம் இதனால் டிஸ்லெக்சியா எற்பட்டுள்ளதா என்பதை அறிய இது உதவும்.
கல்வித் திறன் குறித்த மதிப்பீடு : ஒரு நிபுணரை வைத்து உங்கள் குழந்தைகளின் வாசிப்பு எழுத்து புரிதல் திறனை பரிசோதனை செய்யலாம்.
சிகிச்சை :
டிஸ்லெக்சியாவிற்கு காரணமான மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியை சரிசெய்யும் சிகிச்சை எதுவும் இல்லை. கல்வி போதிப்பு முறைகளில் மாற்றங்களை செய்வதன் மூலமும், மனோவியல் பரிசோதனை மூலம் குழந்தையின் இந்த பிரச்சனை குறித்து ஆசிரியரிடம் தெரிவித்து அதற்கு தக்கவாறு அந்த குழந்தையிடம் மட்டும் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளுமாறும், பாடம் புகட்டும் முறைகளில் மாற்றங்களை செய்யுமாறும் கேட்டுக் கொள்ளலாம்.
உதாரணமாக, புத்தகத்தில் உள்ள பாடங்களை ஒருவர் வாயால் படித்து அதற்குத் தக்கவாறு புத்தகத்தில் உள்ள எழுத்துகளை அடையாளம் காட்டி பயிற்றுவிக்கலாம். இக்குழந்தைகளின் அனைத்து புலன் உணர்வுகளும் உணருமாறு பாடம் புகட்டல் அணுகுமுறைகளை இந்த துறையில் நிபுணர்களானவர்கள் செய்வார்கள்.
அனைத்திற்கும் மேலாக பெற்றோர்கள் இக்குழந்தைகளிடம் இது ஒரு சாதாரண விஷயம் என்றும் விரைவில் படிக்கத் தொடங்கிவிடுவாய் என்றும் உணர்வு பூர்வமான ஆதரவு அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் தவிர பிற கதைப் புத்தகத்தை வாசித்துக் காட்டி அதில் உள்ள எழுத்துகளை அடையாளம் காட்டி மெதுவாக எழுத்துக்கு தயார்படுத்தி வந்தால் இது நாளடைவில் குணமாகும் மிகச் சாதரணமான ஒரு நிலையே.
23.12.08 கட்டுரை:உறங்கும்போது சிறுநீர் கழிக்கிறதா குழந்தை?
வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்போதே சிறுநீர் கழிப்பது.
தற்போது மழை காலம். இரவு நேரங்களில் பெரியவர்களே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எரிச்சலுடன் எழுந்து செல்ல வேண்டியதாகிறது. குழந்தைகள் என்றால் கேட்கவா வேண்டும்?
மழைக்காலம் மட்டுமின்றி, மற்ற நேரங்களில் கூட உறங்கிக் கொண்டிருக்கும்போது சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். பொதுவாக 3 அல்லது மூன்றரை வயது வரை குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் அதற்கு மேலும் இது நீடித்தால் உடனடியாக அதை கவனிக்க வேண்டும்.
10 வயது வரை கூட சில குழந்தைகள் படுக்கையில் தன்னையறியாமல் சிறுநீர் கழித்து விடுகிறார்கள். நாளடைவில் சரியாகிவிடும் என்று அலட்சியம் காட்டினால் பிற்காலத்தில் ஏதேனும் ஒரு தொல்லையாக இது மாறக்கூடும்.
என்ன காரணம்?
உறங்கிக் கொண்டிருக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதற்கு உடல் நலக்கோளாறு அல்லது மனதில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.
உடல்நலக்கோளாறு என்று பார்த்தால் சிறுநீரில் அமிலத் தன்மை அதிகரிப்பு, குடலில் பூச்சிகள் இருத்தல், சிறு மூத்திரப் பைகள் உருவாகுதல் போன்றவை காரணமாக அமைந்து விடுகின்றன. ஏதாவது ஒரு வகையில் குழந்தை பயத்துடன் இருத்தல், ஆசிரியர்கள்- பெற்றோர்களிடம் ஏற்படும் அச்சம், மனதில் உண்டாகும் பீதி, வருத்தம், ஏமாற்றம் போன்றவை சிறுநீர் கழிப்புக்கான மன ரீதியான காரணங்கள்.
தீர்வு என்ன?
படுக்கையில் தன்னையறியாமல் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளை பெற்றோர் சிலர் கடுமையாகத் திட்டுகின்றனர். இதனை குழந்தைகள் அவமானமாகக் கருத்தலாம். சிறுநீர் கழிப்பை இது மேலும் அதிகமாக்கு. இதனால் எந்த பலனும் இல்லை.
திட்டுவதற்கு பதில் குழந்தையிடம் சிறுநீர் கழிப்பதை நிறுத்தும்படியும், சிறுநீர் வரும்போது தன்னை தயங்காமல் அழைக்கும்படியும் பக்குவமாகப் பெற்றோர்கள் எடுத்துக்கூற வேண்டும்.
தினமும் சிறுநீர் கழித்து விட்டு படுக்கச் செல்லும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். தூங்கிய ஒரு மணி நேரம் அல்லது 10, 11 மணி வாக்கில் குழந்தையை எழுப்பி மீண்டும் சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்ல வேண்டும்.
அந்த நேரத்தில் அதட்டி, மிரட்டி அழைத்துச் செல்லக் கூடாது. வரவில்லை என்று குழந்தை கூறினால், பின்னர் வற்புறுத்தக்கூடாது. இதை ஒரு வழக்கமாக சிறிது காலம் செய்து வந்தால் படுக்கயில் சிறுநீர் போகும் பழக்கம் படிப்படியாக மறைந்து விடும்.
குழந்தைக்கு மன ரீதியாக என்ன பிரச்சனை என்று பெற்றோர்கள், அன்பாக விசாரித்து அனுசரணையாக அதை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
22.12.08 கட்டுரை:தலைவலிக்கு கை வைத்தியம் பலன் தருமா?
அலுவலகத்தில் வேலை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது பலர் தலைவலியால் அவதிப்படுவதைப் பார்க்கலாம். இத்தகையத் தலைவலியை கை மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம்.
இதற்கான எளிய மருத்துவச் சிகிச்சை முறை குறித்து விவரிக்கிறார் டாக்டர் டி. காமராஜ்.
தலைவலி என்பது ஒரு நோயல்ல. ஒரு நோய்க்கான அறிகுறி தான். இத்தகைய தலைவலியைப் போக்க கைவைத்தியம் பலன் தரும்.
கைகளால் தலைமுடியை நன்றாகப் பிடித்து பின் பக்கமாக இழுத்து சுமார் 5 நொடிகள் வைத்திருந்து, நிதானமாக கைகளை எடுத்தால் வலி கொஞ்சம் குறையும்.
இது மட்டுமல்ல, நல்ல இயற்கைக் காற்று படும்படி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் தலைவலியை மட்டுப்படுத்தலாம்.
யோகாசனங்கள் போன்றவைகளைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் தலைவலி ஏற்படும் நேரத்தில் யோகா, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைச் செய்து வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ஆவி பிடித்தல் மூலம் வியர்வையை வெளியேற்றினால் தலைவலியில் இருந்து தப்பிக்க முடியும்.
சூடா டீயை வெப்பமான அறையில் வைத்து குடித்தால் தலைவலி குறையத் தொடங்கும்.
19.12.08 கட்டுரை:கணினிக்கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
நமது கணினியில் directory அல்லது கோப்புகள் போன்றவை தேவையில்லை என நினைத்தால், அவற்றை அழிக்கிறோம். அழிக்கப்பட்டவை recycle bin ல் (குப்பைத்தொட்டி) சேகரமாகும். அங்கேயும் சென்று empty recycle bin எனக் கொடுத்துக் காலி செய்கிறோம்.
Shift + Delete சேர்த்து அழித்தால் recycle bin க்குச் செல்லாமல் நேரடியான அழிவு.
இந்தச் செயல்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். விண்டோஸ் பயனாளர்களுக்குப் பரிச்சயமான செயல்களே இவை.
ஆனால் ஒரு திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர் ஒரு பார்வை பார்த்தால் அவரிடம் உள்ள data recovery பயன்பாட்டின் மூலம் இப்படி அழிக்கப்பட்ட கோப்புகளை / directoryகளை மீட்டுவிடுவார்.
அழிக்கப்பட்ட இடத்தில் வேறு ஒரு தகவல் பதிவாகாமல் இருக்கும் வரையில் அதை மீண்டும் தருவித்துவிடலாம். இதனால் ஏதேனும் ரகசியத் தகவல்களை அழித்துவிட்டோம் என யாரும் மார்தட்டிக் கூறிவிட இயலாது.
அழிக்கப்பட்ட தடயத்தைக் கணினியின் hard disk மறக்கவே மறக்காது – எதுவரையில்? – புதிய தகவல்கள் ஏற்கனவே அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அமரும் வரையில்.
கோப்புகளை மீட்கச் செய்ய வழியே இல்லாமல் – ஒட்டுமொத்தமாக நிரந்தரமாக (அதி தீவிரமான நிரந்தரமாக) அழித்துக் காலி செய்வது எப்படி?
இதற்கு SDelete (Secure Delete)பயன்பாடு உதவுகிறது. Microsoft நிறுவனத்தின் இலவசப் பயன்பாடு இது.
தரவிறக்கம் (Download) செய்யவும், மேலதிக விபரங்களுக்கும் கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்.
http://technet.microsoft.com/en-us/sysinternals/bb897443.aspx
18.12.08 கட்டுரை:வங்கி திவாலானாலும் உங்க பணத்தை பாதுகாப்பது எப்படி?
பொதுவா ஒரு வங்கி திவாலானால் அதில் உள்ள பணம் அனைத்தும் அவ்வுளவு தான் என்ற தவறான ஒரு கண்ணோட்டம் உள்ளது. ஆனால் அது முற்றிலும் நிஜம் அல்ல. ஏனெனில் வங்கிகள் அனைத்தும் அவை பெறும் வைப்பு நிதிக்கு காப்பீடு செய்து இருக்கும் (புரியற மாதிரி தமிழல சொல்லணுமுன்னா நீங்க bankல டெபாசிட் செய்யும் பணத்தை வங்கிகள் Insure செய்து இருக்கு.). ஆனாலும் இதுல ஒரு பிரச்சனை இருக்கு அது என்னானா நீங்க முதலீடு செய்து இருக்குற ஒரு லட்ச ரூபாய்க்கு தான் அவர்கள் இந்த காப்பீட்டை எடுத்து இருப்பாங்க (இது தான் RBIயோட limit).எனவே நீங்க எவ்வுளாவு போட்டு இருந்தாலும் ஒரு லட்சம் மட்டும் தான் திரும்ப வரும், இது வட்டியையும் சேர்த்து.
உதாரணமா நீங்க வங்கி Xயோட அண்ணாசாலை கிளையில் ஒரு 50 ஆயிரம் fixed deposit, வேளச்சேரி கிளையில் ஒரு 50 ஆயிரம் fixed deposit, திருச்சி கிளையில் ஒரு 25 ஆயிரம் saving accountல போட்டு வெச்சியிருக்கீங்கன்னு வையுங்க. ஒரு நாள் வங்கி X திவால் ஆயிடுது. ஆனால் அந்த வங்கி செய்து இருக்கிற காப்பீட்டின் காரணமாக நீங்க போட்டு வெச்சியிருக்கிற 1.25 லட்சத்துல ஒரு லட்சம் திரும்ப கிடைத்துவிடும். ஆனால் 25ஆயிறத்தை நீங்க இழக்க நேரிடும் இந்த மாதிரி நிலைமையை தவிர்க்கவும் ஒரு வழி இருக்கு.
வங்கிகளில் பணத்தை முதலீடு செய்யும் பொழுது மொத்த பணத்தையும் ஒரே வங்கியில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.அப்படி தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒரே வங்கியில் மொத்த பணத்தையும் முதலீடு செய்ய வேண்டி வந்தால், அதை joint அக்கவுண்டாக முதலீடு செய்வது உசிதம். அதாவது மேல சொன்ன உதாரணத்தையே எடுத்துகலாம். 50ஆயிரம் + 50 ஆயிரம் + 25 ஆயிரம் என்று ஒருவர் பெயரில் மூன்று தனித்தனி கணக்குகளில் முதலீடு செய்து 25 ஆயிரத்தை இழப்பதை காட்டிலும். அதே முதலீட்டை மூன்று தனித்தனி joint accountஜ திறந்து கொள்ளவும் எப்படின்னா முதல் accountஇல் உங்களை primary ஆகவும் இரண்டாவது கணக்கில் உங்கள் மனைவியை primary ஆகவும் மூன்றாவது கணக்கில் உங்க பசங்களை primary ஆகவும் நீங்க primaryயாக உள்ள கணக்கை தவிர்த்து மற்ற கணக்குகளில் உங்களை secondaryஆகவும் வைத்து கணக்கை துவங்கிக்கொள்ளவும். மேலே சொன்ன மூன்று வங்கிகணக்கிலும் நீங்க இருந்தாலும் மற்ற இரண்டு கணக்குகளில் primaryயாக வேறு ஒருவர் இருக்கும் காரணத்தினால் இவை மூன்றும் தனித்தனியே காப்பீடு செய்யப்படும்.இதன் மூலம் ஒரே வங்கியில் மூன்று லட்ச ரூபாய் வரை முதலீடு செய்து கவலையின்றி இருக்கலாம்.
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் இருப்பது போல அமெரிக்காவில் இது ஒரு லட்ச டாலர் (சமீபத்தில் இதை 2.5 லட்ச டாலராக உயர்த்தி உள்ளதாக கேள்வி யாருக்காவது தெரியுமா?) வரை முதலீடுகளுக்கு காப்பீடு உண்டு.இது பற்றி மேலும் விவரம் அறிய இங்கே செல்லவும்.
17.12.08:இன்றைய கட்டுரை:மழலைகளுக்கான கணிதப்பயிற்சி மென்பொருள்
இந்த மழலைகளுக்கான கணிதப்பயிற்சி மென்பொருள் உபயோகமாக உள்ளது
கீழ்க்கண்ட பதிவுப்பெயர், மற்றும் சாவியைக் கொடுத்துப் பதியவும்.
குழந்தைகளின் கணித அறிவை விருத்தி செய்ய அருமையான மென்பொருள் உங்கள் கணினிவசம்.
http://www.4shared.com/file/76199160/d4338db9/mathsetup_2.html
இன்றைய கட்டுரை:செல்போனை மீட்கும் சாப்ட்வேர்
செல்போன் காணாமல் போய்விட்டது என்றால் உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடியது என்ன? வருத்தப்படுவது மற்றும் புலம்புவதை எல்லாம் செய்து முடித்த பிறகு, அல்லது அதற்கு முன்பாகவோ செல்போன் சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் எண்ணை செயல்படாமல் முடக்கி வைப்பது மட்டும் தான்.
தொலைந்த/திருடப்பட்ட செல்போன் திரும்ப கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து ஒரு எப்ஐஆர் பதிவு செய்து கொள்ளலாம்.
ஒருசில செல்போன் சேவை நிறுவனங்கள் செல்போன் நம்பரை முடக்குவதற்கே எப்ஐஆர் நகலை கேட்கின்றன. எனவே, செல்போன் திரும்ப கிடைக்கும் இல்லாவிட்டாலும் இதற்காகவேனும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு மேல் அதிகம் செய்வதற்கு இல்லை. வேண்டுமானால் செல்போனை திருடிச் சென்ற நபரை மனதார வசைபாடலாம். செல்போன் உரிமையாளர்கள் பலருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்படி செல்போனை பறிகொடுப்பவர்கள், அதனை நினைத்து நொந்து கொள்ள வேண்டிய நிலை இனி இல்லை.
தொலைந்த செல்போன்களை மீட்டுத் தரக்கூடிய விசேஷ சாப்ட்வேர்கள் தற்போது அறிமுகமாகி இருக்கின்றன. இந்த சாப்ட்வேர்களை செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டால், செல்போன் உங்கள் கையை விட்டு போகும் நேரத்தில் அது இருக்கும் இடத்தை சாப்ட்வேர் காண்பித்து விடும்தொலைந்து போகும் செல்போன்கள் நவீன வாழ்க்கையின் புதிய பிரச்சனையாக உருவாகியிருக்கும் நிலை இவற்றுக்கு தீர்வு காண தொழில்நுட்பத்தை உதவிக்கு அழைக்கும் நோக்கத்தோடு செல்போன் மீட்பு சாப்ட்வேர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மும்பையை சேர்ந்த மைக்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனம் லாஸ்ட் மொபைல் டிராகிங் சாப்ட்வேர் என்னும் பெயரில் இத்தகைய விசேஷ சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது.
இந்த சாப்ட்வேரை செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டால், அது செல்போன் காணாமல் போவதை கண்காணித்து கொண்டே இருக்கும். அதாவது, உங்களுடைய போன் வேறொருவர் கைக்கு சென்று அவர் அதிலிருந்த சிம்கார்டை தூக்கியெறிந்து விட்டு புதிய சிம்கார்டை பயன்படுத்த தொடங்குவார் அல்லவா? இப்படி புதிய சிம்கார்டு நுழைக்க பட்டதுமே இந்த சாப்ட்வேர் உங்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலம் தகவல் அனுப்பிவிடும்.
இதற்காக பதிவு செய்யும் போதே மாற்று தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியை சமர்ப்பிக்க வேண்டும். புதிய சிம்கார்டு பயன்படுத்தப்படுகிறது என்னும் தகவல் தெரிவிக்கப்படுவதோடு, அந்த போன் எந்த இடத்தில் இருக்கிறது என்னும் விவரமும் தெரிவிக்கப்படும்.
அந்த விவரத்தை காவல் நிலையத்தில் தெரிவித்து செல்போனை மீட்க முயற்சிக்கலாம். ஆச்சரியப்படும் வகையில் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திய ஒருசிலர் தொலைந்த செல்போனை மீட்டியிருக்கின்றனர்.
ஆனால் ஒன்று இதற்கு சேவை கட்டணமாக வருடத்திற்கு 399 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதேபோல் பிபிஎல் மொபைல்ஸ், ஜிஎஸ்எம் போன்களுக்காக ஒரு சாப்ட்வேரை அறிமுகம் செய்துள்ளது. ஒரேமுறை 149 ரூபாய் கட்டணம் செலுத்தி இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கட்டணம் செலுத்த தயங்குபவர்களுக்காக என்று டெக்ஸ் மொபைல், எம் கார்டு என்னும் இலவச சாப்ட்வேரை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சாப்ட்வேர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் செயல்படக்கூடிய வர்ச்சுவல் மொபைல் செக்யூரிட்டி சாப்ட்வேரை இன்னோவா டெக்னாலஜிஸ் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த சாப்ட்வேர், உங்களது போனில் இருந்தால் அது தொலைந்து/திருடப்பட்டு வேறொருவரால் பயன்படுத்தப்படும் போது அதுபற்றிய விவரம் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படுவதோடு, போனிலிருந்த செல்போன் முகவரிகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவையும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த சாப்ட்வேர் செல்போனை பயன்படுத்துபவர் இருப்பிடத்தை தெரிவிப்பதோடு, அவர் எந்த எண்ணுக்கெல்லாம் அழைத்து பேசுகிறார் என்ற விவரத்தையும் அனுப்பி வைக்கிறது. அதுமட்டுமல்ல லவுடு ஸ்பீக்கர் வசதி மூலம் போனை எடுத்தவர் என்னவெல்லாம் பேசுகிறார் என்பதையும் கண்காணிக்க முடியும்.
இந்த தகவல்களை எல்லாம் காவலர்களிடம் தெரிவித்து போனை மீட்பது சுலபம். ஒரேமுறை 349 ரூபாய் கட்டணம் செலுத்தி இதனை பயன்படுத்தலாம். அற்புதமான சாப்ட்வேராக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் ஒரே பிரச்சனை என்னவென்றால் இந்த சாப்ட்வேர்கள் பெரும்பாலும் நவீன வசதி கொண்ட செல்போன்களில் மட்டுமே செயல்படக் கூடியவை என்பது மட்டும்தான்.
எனவே இவற்றை வாங்குவதற்கு முன்பாக இந்த சாப்ட்வேர் உங்கள் செல்போனில் செல்லுபடியாகுமா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால், முதலில் இத்தகைய கண்காணிப்பு சாப்ட்வேர் செயல்படக்கூடிய நவீன போன்களை வாங்கிக் கொள்ள வேண்டும.
இன்றைய கட்டுரை:மின்சாரத்தை சேமிக்க..
ஒரு வீட்டில் வருடதிற்க்கு குளிர்சாதன உபயொக்கதால் 600-1200 கிலோவாட்-ஹவர் (kWh) மின்சாரம் உபயோகமாகிறது. இதில் மின் உபயோகத்தக் குறைக்க கீழே உள்ள வழிகளை பின்பற்றலாம்.
· உங்கள் குளிர்சாதனதின் வெப்பதினைஅ 37-40 F அளவில் இருக்குமாறு வைக்கவும்.
· அதிகமான பொருட்களை பெட்டியினுள் திணிக்க வேண்டாம், இதனால் உள்ளே காற்றோட்டம் சரியாக இருக்காது. சில நேரம் கதவினைச் சரியாக மூட இயலாமல் போய் மின்சாரம் வீணாகும்.
· குளிர்சாதனப் பெட்டியின் கதவில் காற்று புகாமல் இருக்க உபயோகிக்கபடும் கேஸ்கட்(gaskets) சரியாக இருக்கிறதா என்பதை மாதமொருமுறை சரிபார்க்கவும். அதன் திறனை இழந்து விட்டால் உடனடியாக மாற்ற வேண்டும்.
· திரவ உணவுகளை உள்ளே வைக்கும் போது மூடி போட்டு வைக்கவும், இல்லையெனில் அவை ஆவியாகி கம்ப்ரஸரின் வேலையை அதிகமாக்கி விடும்.
· சூடான உணவும் போருட்களை உள்ளே வைக்க கூடாது. ஆறவைத்த பின்னர்தான் உள்ளே வைக்க வேண்டும்.
· சமைக்கும் போது பக்கதுலதான் இருக்குனு கரிவேப்பிலைக்கு ஒரு முறை, கொத்தமல்லி இலை எடுக்க ஒருமுறை என திறந்து திறந்து மூட வேண்டாம், நால்ல யோசிச்சி இன்னிக்கு சமைக்கப் போறதுக்கு இதேல்லாம் வேணும்னு முடிவு செய்து ஒரே முறை திறந்து தேவையானவற்றை எடுதுவிட்டு மூடிவிட வேண்டும்.
· மின்ச்சாரதைச் சேமிக்க பவர் சேவர் சுவிட்ச் உங்களது குளிச்சாதனப் பெட்டியில் இருந்தால் அதை உபயோகப் படுத்தவும்.
· வீட்டில் நேரடியாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் குளிர்ச்சதனப் பெட்டியை வைக்க கூடாது.
குளிர்சாதனம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
· மின் உபயோகதினை 40% குறைக்க ஒருவழி வரும் தீபாவளிக்கு எக்சேஞ்ச் ஆபரில் பழைய குளிர்சாதனத்தைக் கடாசிவிட்டு புதுசுக்கு மாறிடுங்க.
· 165 லிட்டடர் வேனுமா, இல்லை 200 லி, சிங்கிள் டோர், டபுள் டோர், எதுவானாலும் உங்கள் தேவையக்கு சரியான அளவில் வாங்க வேண்டும். சிறிதாக வாங்கி விட்டு, உள்ளே பொருட்களைத் திணிக்க வேண்டாம்.
· மின்சேமிப்பு முறைகள் உள்ளதாவும், எனர்ஜி ஸ்டார் உள்ளதாகவும் பார்த்து வாங்குங்கள்.
இன்றைய கட்டுரை:5 வச்சா பத்து ரூபா… 10 வச்சா 20 ரூபா…!: உலக மெகா மோசடி! ?
சாலை ஓரங்களில் 3 சீட்டு மோடி மஸ்தான்கள் இப்படி கூவி, கூவி அழைப்பதை பார்த்திருக்கலாம். படிக்காத, ஏழை மக்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இவர்களிடம் ஏமாறுவது வழக்கம். சில நேரங்களில் மாடி வீட்டு மைனர்கள் கூட இவர்களிடம் ஏமாறுவார்கள். வசீகர பேச்சும் கை மாற்றும் கலையும்தான் இந்த மோடி மஸ்தான்களின் முதல்.
இதே வேலையை அமெரிக்காவில் கோட், சூட் போட்ட ஒரு ‘சீமான்’ செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் அவர் அடித்த தொகை, 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய். இந்தியாவின் இந்த ஆண்டு பட்ஜெட் தொகையே 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஒரு நாட்டின் பட்ஜெட் தொகையில் கால்வாசியை ‘ஸ்வாகா’ செய்த அந்த அமெரிக்க சீமான் பெர்னார்ட் மேடாப் (70). 1990, 1991, 1993ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான ‘நாஸ்டாக்’கின் தலைவராக இருந்தவர்.
இவரா, இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டது என்று அமெரிக்காவில் அதிர்ச்சி அலை பரவிக் கொண்டிருக்கிறது. சிங்கிள் பெட்ரூம் பெஞ்சமின் முதல் கோடிகளில் புரளும் பிரெட் வில்போனும் இந்த மோசடியில் ‘கிளீன் போல்ட்’ ஆனதுதான் பரிதாபம்.
இந்த தள்ளாத வயதில் பெர்னார்ட் மேடாப் அப்படி என்னதான் மோசடி செய்துவிட்டார்?
பங்குச்சந்தை பண ‘விளையாட்டில்’ இளம் வயதிலேயே கைதேர்ந்த பெர்னார்டு தன்னுடைய 22 வயதில் 1960ல் ‘பெர்னார்ட் எல். மேட்ஆப் இன்ஸ்வெஸ்ட்மென்ட் செக்யூரிட்டீஸ்’ என்ற பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தை நியூயார்க் நகரில் தொடங்கினார்.
குறுகிய காலத்தில் தங்களுடைய பணம் குட்டி மேல் குட்டி போட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இவரது குறி. அவர்களிடம் சென்று, ‘‘உங்கள் பணத்தை என் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து எங்குமே இல்லாத அளவுக்கு லாபத்துடன் திருப்பி தருகிறேன்’’ என்று உறுதி அளித்தார். 3 சதவீதம், 5 சதவீதம் என்று லாபம் கிடைத்த நிலையில், இவர் குறைந்தபட்சம் 10 சதவீதம் தருவதாக உறுதி அளித்துள்ளார்.
பெர்னார்டின் பேச்சையும், பணக்கட்டுகளை எண்ணும் ஆசையுடனும் இருந்த ஏராளமானவர்கள் கட்டுக்கட்டாக டாலர்களை கொண்டு வந்து நீட்டினர். சொன்னதை விட ஒருபடி மேலே சென்று டாலர்களை இரண்டு மடங்கு, மூன்று மடங்கு என்று சகட்டுமேனிக்கு அள்ளித்தர ஆரம்பித்தார்.
ஒரு முறை லாபம் கண்டவர்கள், மீண்டும், மீண்டும் டாலர்களை கொண்டு வந்து கொட்டினர். கோடீஸ்வரர்கள் எல்லாம் பெர்னார்ட்டையும், அவரது நிறுவனத்தையும் அப்படியே நம்பினர். பெர்னார்டின் நிறுவனம் நாளரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பல இடங்களில் வளர ஆரம்பித்தது. அவருடைய சொத்தும் அந்தஸ்தும் பல மடங்கு உயர ஆரம்பித்தது.
ஸ்டெர்லிங் ஈக்யுட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரெட் வில்போன், ஒரு படத்தில் நடிப்பதற்கு பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ராபர்ட் லோகியா, யூதர்கள் அமைப்பான யேஷிவா பல்கலை, அரசு வக்கீல் ஜெர்ரி ரேஸ்மென் என பலர் பெர்னார்ட்டை நம்பினர் என்றால் இவரது கில்லாடித்தனம் விளங்கும்.
பெர்னார்ட் செய்தது இதுதான். முதலில் பணம் கொடுத்தவர்களுக்கு அடுத்து வருபவர்களிடம் பணம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுப்பார். அவர்களுக்கு அடுத்தடுத்து பணம் தருபவர்களிடம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுப்பார்.
இந்த விஷயம் இப்போதுதான் வெளியே வந்துள்ளது. அதுவும் அவரது வாயாலேயே வெளிவந்து மூலையில் முடங்கிவிட்டார். எந்த பங்குச்சந்தை பெயரைச் சொல்லி வளர்ந்தாரோ, அதே பங்குச்சந்தையால் வீழ்ந்துள்ளார். இவரது பொன்முட்டையிடும் திட்டம் வெளியே வந்ததும் ஒரு சுவாரசியமான விஷயம்.
அமெரிக்காவில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து கோடீஸ்வரர்கள் எல்லாம் ஓட்டாண்டிகளாக மாறிக் கொண்டிருந்த நிலையில், பலர் எங்கெல்லாம் முதலீடு செய்திருந்தார்களோ அதையெல்லாம் திருப்பி எடுக்க ஆரம்பித்தனர்.
இப்படித்தான் பெர்னார்டிடம் முதலீடு செய்தவர்கள் பணத்தை திருப்பி கேட்க ஆரம்பித்தனர். பெர்னார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அவரிடம் சென்று, ‘‘நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் பலர் பணத்தை திரும்பி கேட்கின்றனர். இதுவரையில் கேட்டுள்ளவர்களுக்கு மட்டும் 35,300 கோடி ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டியுள்ளது’’ என்றனர். மேலும், 3 மாதமாக சம்பளம் தராததால் அதையும் கேட்டுள்ளனர்.
இந்த விஷயத்தை அலுவலகத்தில் வைத்து பேச விரும்பவில்லை என்று கூறிய பெர்னார்ட், வீட்டில் வைத்து இதுகுறித்து பேசலாம் என்று கூறிச்சென்றுவிட்டார்.
ஏற்கனவே நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக சந்தேகப்பட்ட ஊழியர்கள் மொத்தமாக வீட்டுக்கு சென்று நின்றுவிட்டனர். அப்போதுதான் பெர்னார்ட் ‘திருவாய்’ மலர்ந்தார். ‘‘இத்தனை நாள் நான் நடத்தியது போலி நிறுவனம்தான். என்னிடம் எந்த சொத்தும் கிடையாது. நிறுவனம் திவாலாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது’’ என்றார்.
அதிர்ச்சி அடைந்த மகன்களே பங்குச்சந்தை கமிஷனுக்கு தகவல் தெரிவித்ததாக ‘வால் ஸ்டிரிட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. கடைசி நேரத்தில் 10 கோடி டாலர் வரை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வாரி வழங்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கமிஷனின் தலைவரும் உறுப்பினர்களும் எப்.பி.ஐ.யிடம் புகார் செய்தனர்.
எப்.பி.ஐ. மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. நீதிமன்ற வளாகமே கட்சி கூட்டம் நடக்கும் இடம்போல் ஆகிவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி லூயிஸ் ஸ்டான்டன், பெர்னார்டின் சொத்துக்களையும், அவரது நிறுவனத்தையும் உடனடியாக முடக்கி வைக்க உத்தரவிட்டார். வக்கீல் லீ ரிச்சர்ட் என்பவரை நீதிமன்ற மேற்பார்வையாளராகவும் நியமித்தார்.
முதல்கட்ட விசாரணையில் 83,300 கோடி ரூபாய் அளவுக்கு பெர்னார்டுக்கு சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்ஹாட்டன், புளோரிடா ஆகிய இடங்களிலும், பிரான்ஸ், சவுதியில் உள்ள பனைமர கடற்கரையிலும் பலகோடி சொத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. பெர்னார்டுக்கு சொந்தமாக ஒரு சொகுசு கப்பலும் இருப்பதை எப்.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
இப்போது பெர்னார்ட் சிறையில் 1, 2, 3 என எண்ணிக் கொண்டிருக்கிறார். ?
Recent Comments